வியாழன், 11 ஜூன், 2026

காஞ்சி காமாட்சியின் வரலாறு - லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 

லலிதா திருபுரசுந்தரி தேவர்களுக்கு இட்ட கட்டளை 




காஞ்சி காமாட்சியின் கட்டளைக்கிணங்க, தேவர்கள் பந்தகாசுரனை, தேவி தன் சுண்டு விரலால் கீறி காட்டிய இடத்தில புதைத்தனர். புதைத்த இடத்தில ஜெயஸ்தம்பம் ஒன்றையும் காமாக்ஷி அம்மனின் கட்டளையை ஏற்று நட்டனர் . மேலும் தேவர்கள்  24 அட்சரங்களை கொண்ட காயத்ரி மந்திரத்தை குறிக்கும் வண்ணமாக 24 தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்றையும் கட்டினார்கள். பிறகு தாங்கள் தரிசித்து பாக்கியம் பெற்ற அன்னையின் திருவுருவத்தை சிலையாக செய்து, பிரணவ மந்திரத்தை குறிக்கும் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். பின்னர் தேவர்கள், அன்னையின் ஆணைக்கு இணங்க கதவை மூடிவிட்டு வெளியே வந்து அமர்ந்து, அன்று இரவு முழுவதும் அன்னைக்கான மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்து கொண்டிருந்தனர். மறுநாள் விடியற்காலைக்கு சற்று முன்பு, தேவர்கள் மிகுந்த பக்தியுடன் கதவை திறந்த பொது, அவர்கள் ஆச்சரியப்படும் வண்ணம் அன்னை ராஜா ராஜேஸ்வரியாக காட்சி கொடுத்தால். காஞ்சியில் உள்ள காமகோட்டத்தில் உள்ள காயத்ரி மண்டபத்தில், ஸ்ரீ காமாக்ஷி தேவியின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, தேவர்களின் தலைமைச் சிற்பியான விஸ்வகர்மா ஒரு பல்லக்கையும், பிரம்மதேவர் முத்துக்களால் ஆன ஒரு சிகை அலங்கார ஆபரணத்தையும், மகாவிஷ்ணு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு கிரீடத்தையும், சிவபெருமான் ஸ்ரீ சக்கரம் என்றழைக்கப்படும் ஒரு ஆரத்தையும் வழங்கினர். அவர்கள் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் திருவுருவச் சிலைக்கு அனைத்து ஆபரணங்களையும் அணிவித்து, அவளை வழிபட்டு, காஞ்சியில் உள்ள இந்தத் தலத்தைப் புனிதப்படுத்தி, இனிவரும் எல்லா காலங்களிலும் பக்தர்களுக்குத் தனது அருளைப் பொழிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.


காஞ்சி காமாட்சியின் அருள் லீலை- மஹாலக்ஷ்மி அருஉருவ சாபத்தில் இருந்து விடுபடுதல்

 காஞ்சி காமாட்சியின் அருள் லீலை 

மஹாலக்ஷ்மி  அருஉருவ சாபத்தில் இருந்து விடுபடுதல்



 திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ​​ஆமையாக உருவெடுத்து, மந்தார மலையைத் தன் முதுகில் தாங்கியிருந்த வெண்ணிறத் திருமேனியுடைய விஷ்ணு பகவான், ஹாலாஹல விஷத்தின் கொடிய வெப்பத்தால் பீடிக்கப்பட்டு, அவரது திருமேனி கருமை நிறமடைந்தது. பாற்கடலில் இருந்து தோன்றிய லட்சுமி தேவியை தேவர்கள்  விஷ்ணு பகவானுக்குத் திருமணம் செய்து வைக்க முன்வந்தனர். தனது பளபளப்பான பொன்னிற மேனிக்கு பெயர் பெற்ற லட்சுமி தேவி, ஒருமுறை விஷ்ணுவின் கருமையான நிறத்தைக் கேலி செய்து, அவர் தனக்குச் சமமானவர் அல்ல என்று வேடிக்கையாகக் கூறினார். தனது அழகான நிறத்தைப் பற்றிய எண்ணத்தால் ஏற்பட்ட அவளது கர்வத்தை அடக்க  விஷ்ணு பகவான், மஹாலக்ஷ்மி தனது அழகை இழக்க வேண்டும் என்று சபித்தார். விளையாட்டுத்தனம்கூட சில சமயங்களில் துயரமாக மாறக்கூடும் என்பதையும், மிகவும் நெருக்கமான மற்றும் அன்பானவர்களிடம் பேசும்போதுகூட ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உலகுக்குக் காட்ட இது ஒரு உதாரணமாகும். இதனால் லட்சுமி மிகவும் மனவேதனை அடைந்து, தான் இழந்த அழகை மீண்டும் அருளுமாறு ஸ்ரீ காமாட்சி தேவியிடம் பிரார்த்தனை செய்தாள். ஸ்ரீ காமாக்ஷி அவளுக்கு ஆறுதல் கூறி, காஞ்சிபுரத்தில் உள்ள காமகோட்டத்தின் காயத்ரி மண்டபத்தில் அமைந்துள்ள தனது சன்னதிக்கு இடதுபுறத்தில் இருக்குமாறு பணித்தார். அதன் மூலம், அவளுடைய பக்தர்கள் அவளுக்குக் குங்குமப் பிரசாதத்தை வழங்கி, அதை அவளுக்கே மீண்டும் சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் மகிமையால் அவள் தனது அழகிய உருவத்தை மீண்டும் பெறுவாள் என்றும் கூறினார். அதற்குப் பதிலாக, தான் அவர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வழங்குவதாக அவள் லட்சுமியிடம் கூறினாள். லட்சுமி தேவி அவளது விருப்பத்திற்கு இணங்கி, தனது அழகிய வடிவத்தை மீண்டும் பெற்றாள். இவ்வாறு அருவ லட்சுமி, சௌந்தர்ய லட்சுமியாக மாறினாள்.

விஷ்ணு பகவானும், அவசரத்தில் தனது பத்தினியான ஸ்ரீ லட்சுமியை சபித்ததில் தான் செய்த தவறை உணர்ந்து, அவளைச் சமாதானப்படுத்துவதற்காக காஞ்சிக்கு வந்தார். காயத்ரி மனபாத்தில், லட்சுமி தேவியின் அழகான திருஉருவை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அவளுக்குத் தெரியாமல் பார்க்க விஷ்ணு விரும்பினார். அவர் அவளை நோக்கி ரகசியமாகச் சென்றபோதிலும், அவள் அவரை கவனித்துவிட்டாள். காமாட்சி தேவியின் பாதுகாப்பில் இருக்கும் தைரியத்தால், தன்னைத் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவை அவள் 'கள்வன்' அதாவது 'திருடன்' என்று அழைக்கும் துணிச்சலையும் கொண்டிருந்தாள். அதனால், காயத்ரி மண்டபத்தில் சௌந்தர்ய லட்சுமிக்கு அருகில் எழுந்தருளியிருந்த விஷ்ணு பகவான், 'கல்வர்' என்று அழைக்கப்பட்டார். கல்வர் சன்னதியானது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும், மேலும் திருமங்கை ஆழ்வார் இந்தத் தெய்வத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.


காஞ்சி காமாட்சியின் வரலாறு- காஞ்சி காமகோடி என்று அழைப்பதற்கான காரணம்

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 



திருவாரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையானை நினைத்தாள் முக்தி, காசியிலே பிறவி பிணி முக்தி. காஞ்சியில்? ஆம் காஞ்சியில் ஒரு நாழிகை வாழ்ந்தால் கூட முக்தி.

காஞ்சியில் கோயில் கொண்டிருக்கும் காமாக்ஷி, தன் பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை அள்ளி தருபவளாக இருக்கிறாள். சக்தி, தாக்ஷயினியாக இருந்த போதில் ஈசனின் உத்தரவை மீறி தக்ஷனின் யாகத்தில் கலந்து கொண்டால். தக்ஷன் ஈசனுக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை கொடுக்காததை கண்டு கோபம் கொண்டு அந்த யாக அக்கினியிலே குதித்தாள். ஈசன் அந்த செய்தியை கேள்வியுற்று தாக்ஷயிணியின்  உடலை தலை மேல் தூக்கி ஆடினார். அப்படி ஆடும் பொழுது அன்னையின் ஒவ்வொரு பாகமும் பூமியில் ஒவ்வொரு இடத்தில விழுந்து அது ஷக்தி பீடமாக மாறியது. அவ்வாறு அன்னையின் நாபி அதாவது வயிற்று பகுதி காஞ்சி மாநகரில் விழுந்தது. தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தைக்கு எவ்வாறு தாயின் நாபி  கொடி மூலம் தாய் உண்ணும் உணவின் போஷாக்கு சென்றடைகிறதோ, அது போல அன்னை பூதேவி, காஞ்சியில் அமர்ந்து உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசியையும் போஷித்து, வளர்த்து ரக்ஷித்து வருகிறாள். 

இந்த க்ஷேத்ரத்தை காஞ்சி காமகோடி என்று அழைப்பதற்கான காரணம், இந்த க்ஷேத்ரத்தில் எவன் ஒருவன் தன் ஆசைகள் நிறைவேற தான,  தர்மங்களை செய்கிறானோ அந்த தான தர்ம பயன்  கோடி கோடியாக வளரும் என்று ஸ்ரீ காமாக்ஷி மஹாத்மயத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு சான்றாக ஒரு நிகழ்வும் நடந்தது. முன்பொரு காலத்தில் பிரம்மன் ஆதி சக்தியை காஞ்சியில் பூஜித்து வந்தார். பூஜையின் முடிவில் தாமரை பூ ஒன்றை வான் நோக்கி எறிந்தார். அது ஒரு மானுடனாகி பிரமனை வணங்கியது. ஆகாயத்தில் இருந்து பூமிக்கு வந்ததால் ஆகாச பூபதி என்று பெயரிட்டார் ப்ரம்மா. அவனிடம் காஞ்சி மாநகரின் ஆட்சியை கொடுத்தார் ப்ரம்மா. அவனும் காஞ்சியை  செவ்வனே ஆட்சி புரிந்து வந்தான்.

ஆகாச பூபதி பிள்ளை வரம் வேண்டி, அம்பாளை பிரார்த்தித்தான். அம்பாளும் ஆகாச பூபதிக்கு இறங்கி, விநாயகரையே அவனுக்கு பிள்ளையாக பிறக்க கடவது என்று அருளினால். அந்த குழந்தையின் பெயர் துண்டீரன். துண்டீரனின் நாம கரண  விழா சிறப்பாக நடைபெற்றது. அன்னதானம் மிக பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. அங்கே தேவியும் வந்து உணவு அருந்தினால். சற்று நேரத்தில் அங்கே பொன்மழை பெய்தது. ஆகாச ராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் தீடிர் என்று பொன்மழை பொழிகிறது? என்ன காரணத்தினால் என்று புரியவில்லை. அப்பொழுது கணபதியின் அம்சமான துண்டீரன் எனக்கு பொன்மழை ஏன் பொழிந்தது என்று தெரியும் என்று கூறினார். அன்னதானத்திற்கு தேவையான  பொருட்கள் சரியாக இருக்கிறதா என்று ராணி சோதிக்கும்போது, அவளுடைய கை விரலில் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்து ஒரு சிறிய பொன்னாலான முத்து பருப்பில் விழுந்தது. அந்த பருப்பில் சமைத்த உணவில் உள்ள அந்த சிறிய பொன்முத்து சக்தியாக வந்து உண்ட தாயின் வாயில் சென்றது. அதுதான், இங்கு பொன்மழை பெய்ய காரணம். அவள் வேறு யாரும் இல்லை காமாக்ஷி தேவி. காமாக்ஷி தேவி தன் பக்தர்கள் ஆத்மார்த்தமாக கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் பல மடங்கு பெருக்க கூடியவள், அதனாலே அந்த க்ஷேத்ரத்துக்கு "காஞ்சி காமகோடி" என்று பெயர் வந்தது. 

காஞ்சியில் துண்டீர மகாராஜாவுக்கு தனி சந்நிதி உள்ளது. 





பூத நாராயனர் வரலாறு

காஞ்சி காமாட்சியின் வரலாறு 

பூத நாராயனர் வரலாறு 



நாராயணர் மல்லகன் என்னும் அசுரனடன் கடுமையாக போர் புரிந்தார். நாராயணர் போர் புரியும்போது மல்லகனின் உடலில் இருந்து விழும் ஒவ்வொரு ரத்தமும் இன்னொரு அசுரனாக உருவாகி நாராயனுடன் போர் புரிந்தது. நாராயணர் பல ஆயிர கணக்கான அசுரனுடன் போர் செய்து களைத்து செய்வதறியாது சிவனிடம் முறையிட்டார். சிவன் தன்னுடைய ஜடா முடியில் இருந்து இரண்டு பூத கணங்களை உருவாக்கி மல்லகனிடம் போர் புரிந்து வெற்றி பெறும்படி ஆணை இட்டார். அந்த இரு பூத கணங்களும் மல்லகனுடன் போர் புரிய தொடங்கின. மல்லகனின் ரத்தத்தில் இருந்து இன்னொரு அசுரன் உருவாவதை உணர்ந்து, இரு பூத கணங்களும் மல்லகனின் ரத்தம் சிந்தாதவாறு, அதை குடித்து போரிட்டு வெற்றி பெற்றது. ஆனால் அசுரனின் ரத்தத்தை பூதகணங்கள் குடித்ததினால், செய்வதறியாது நாராயணனை தாக்கியது. நாராயணரும் இந்த பூதகணங்கள் ஒரு நல்ல காரியத்துக்காக சிவனின் ஜடாமுடியில் இருந்து தோன்றின. இவைகள் அசுரன் ரத்தத்தை குடித்ததினால் இவ்வாறு தாக்குகிறது என்பதை உணர்ந்து அவ்விரு பூத கணைகள் மீதும் நின்று, அமர்ந்து மற்றும் படுத்து, அந்த பூத் கணங்களை தன் சுய கட்டுப்பாட்டிற்கு நாராயணன் கொண்டு வந்தார். பூத கணங்கள் நாராயணரையே நாம் தாகக்கிவிட்டோமே, இந்த பாவத்தை எப்படி போக்குவது என்று சிவனை பிரார்த்தித்து. மேலும் நாராயணனும் சிவனின் பூத கணங்களை தாக்கியதற்காக மனம் வருந்தி சிவனை வேண்டலானார். சிவன் அவர்கள் முன் காட்சி கொடுத்து தன்னுடைய ஐந்து தலையில் இருந்தும் கங்கையை பொழியும்படி செய்து ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அந்த தீர்த்தத்தில் நீராடி பூதகணங்களை தங்கள் பாபத்தை போக்கி கொள்ளும்படி ஆணையிட்டார். பந்தகாசுரனின் ரத்தத்தை குடித்து சுயநினைவு இழந்த பூதகணங்களை நாராயணர் அடக்கி தன சுய நினைவுக்கு கொண்டு வந்ததால் இத்தலத்தில் "பூத நாராயணர்" என்று அமர்ந்த கோலத்திலும், நின்ற கோலத்திலும் மற்றும் சயன கோலத்திலும் நாராயணர் அருள் பாலிக்கிறார். 

காஞ்சி காமாட்சியின் வரலாறு - பந்தகாசுரன் என்னும் அசுரனை அன்னை வதம் செய்தல்

 காஞ்சி காமாட்சியின் வரலாறு 

பந்தகாசுரன் என்னும் அசுரனை அன்னை வதம் செய்தல் 



தேவர்கள் கிளியின் உருவம் கொண்டு லோகமாதாவை பல யூகங்கள் கடந்து தவம் இயற்றினார்கள். அன்னையும் தேவர்கள் படும்  துயரத்தை கண்டு மனமுருகி பந்தகாசுரனை வதம் பண்ண அவதரித்தாள். தேவி ஒரு 9 வயது சிறு பாலகியாக, அவதரித்தாள். தேவர்கள் அந்த பாலா திருபுரசுந்தரியை வணங்கி தங்கள் துயரத்தை கூறினார்கள். அங்கிருந்த 9 வயது பாலா திருபுரசுந்தரியை விடைபெற்று, அஷ்டபுஜங்கள் கூடிய துர்கையாய் உருமாறி பந்தகாசுரனை வதம் செய்ய புறப்பட்டாள். தேவி துர்கை பந்தகாசுரனுடன் போர் செய்து அவன் தலையை கொய்து நேரே தேவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கினாள். மீண்டும் 9 வயது பாலா திருபுரசுந்தரியாக உருவெடுத்து பந்தகாசுரனின் தலையை புதைக்க ஒரு இடத்தை தன் கால் கட்டை விரலால் கீறினால். அந்த இடத்தில பந்தாசுரனின் உடலை புதைக்கும்படி தேவர்களுக்கு ஆணை இட்டால். மேலும் புதைத்த அந்த இடத்தில தன்னுடைய வெற்றிக்கு அடையாளமாக ஜெயஸ்தம்பம் நடும் படி கட்டளையிட்டு மறைந்தாள். தேவர்களும் அன்னையின் ஆணையை ஏற்று, அன்னை காட்டிய இடத்தை தோண்டினார்கள். தோண்டிய அவ்விடத்தில் மல்லகண்  என்னும் அசுரன் கடும் தவம் இயற்றிக்கொண்டு இருந்தான். தேவர்களுக்கு மறுபடியும் என்ன செய்வதென்று புரியவில்லை, நாராயணா! நாராயணா! என்று அலறினர். நாராயணர் அவர்களுக்கு காட்சி கொடுத்து மல்லகனுடன் போர் புரிய துவங்கினார்.


காஞ்சி காமாட்சியின் வரலாறு - சிவன் காஞ்சி க்ஷேத்திர மஹிமையை தேவர்களுக்கு உரைத்தல்

 காஞ்சி காமாட்சியின் வரலாறு

சிவன் காஞ்சி க்ஷேத்திர மஹிமையை தேவர்களுக்கு உரைத்தல் 




பந்தகாசுரன் என்னும் அசுரன் பிரம்மனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். பிரம்மனும் அவனுடைய தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். என்ன வரம் வேண்டுமோ கேள், பந்தகாசுரா என்று பிரம்மன் அருளினார். பந்தகாசுரன் பிரளயம் வரும் வரை தனக்கு அழிவு வர கூடாது என்று வரம் வேண்டினான். பிரம்மனும் அவ்வாறே ஆகட்டும் என்று வரம் அருளினார். பிரளயம் வருவதற்கு வெகு யுகம் இருக்கிறது என்பதை அறிந்த பந்தகாசுரன் தேவலோகத்தை கைப்பற்றி தேவர்களை துன்புறுத்தினான். தேவர்கள் பந்தகாசுரனுக்கு பயந்து இமயமலையில் உள்ள ஒரு குகை வடிவ பிலத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டனர். அந்த குகை வடிவ பிலத்தில் வேதனையோடு தேவர்கள் நடந்து செல்லும்போது குகையின் வெளிப்புற வாயிலை அடைந்தனர். அந்த வெளிப்புற வாயிலின் இறுதியில் ஈசன் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார்.  

இது என்ன வினோதம்! ஈசன் இமயமலையில் இல்லாமல் இந்த பிலத்தில் தவம் புரிந்து கொண்டிருக்கிறார் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஈசன் தன ஆழ்ந்த தவத்தில் இருந்து கண் விழித்து பார்த்தார். தேவர்கள் கவலை தோய்ந்த முகத்தில் இருப்பதை கண்டு, என்ன கவலையாக இருக்கிறீர்கள்? என்று ஈசன் வினவினார். தேவர்களும் பந்தகாசுரனால் தாங்கள் அனுபவித்த துன்பங்களை கூறி இறைவனிடம் புலம்பினர். மேலும் பந்தகாசுரனுக்கு பயந்து எங்கு போவது என்று அறியாமல் இந்த குகை வடிவ பிலத்திற்குள் பித்து பிடித்தது போல் வந்து கொண்டிருந்தோம் என்று கூறினர்.

ஈசன் அவர்களை பார்த்து புன்முறுவல் செய்து, நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்திருக்கிறீர்கள். இந்த பிலம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இடம். இந்த இடத்தில நானே பல ஆண்டுகளாக தவம் செய்து சாப விமோசனம் பெற்றேன். நீங்களும் இந்த பிலத்தில் அமர்ந்து லோகமாதாவை தியானித்து தவம் இயற்றுவீர்களாக என்று கூறினார். தேவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, உலகையே காத்து ரட்சிக்கும் ஈசனுக்கே சாபமா?, தேவர்களின் தலைவன் ஈசனிடம் வினவினான். ஈசனும் தான் சாபம் பெற்ற கதையை கூறினார்.

முன்பொரு சமயம் ரிஷிகள் யாகத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து அதனுடைய சாராம்சத்தை மறந்தனர். அந்த ரிஷிகளின் அங்காரத்தை அடக்க ஈசன் பிக்ஷடனர் வடிவிலும், விஷ்ணு பகவான் மோஹினி வடிவத்திலும் அந்த ரிஷிகள் நடத்தும் யாக சாலைக்குள் நுழைந்தனர். ரிஷி முனிகள் அந்த அனுஷ்ட யாக சம்பிரதாயத்தில் மூழ்கி, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதையே மறந்து யாகம் செய்து கொண்டிருந்தனர். இந்த இடம் உத்தரகாண்டில் உள்ள ஜகேஸ்வர் என்னும் இடத்தில நடந்து கொண்டிருந்தது. அந்த ரிஷிகளின் பத்தினிகள் பிக்ஷடனரின் சுந்தர வடிவில் மெய் மறந்து அவரையே பார்த்து கொண்டிருந்தனர். எவர் தான் அவர் அழகில் மயங்காதவர் உண்டு? அவரே சுந்தரேஸ்வரர் அல்லவா! உடனே அந்த ரிஷிகள் இதனை கவனித்து, நம் மனைவியருக்கு சுய கட்டுப்பாடு என்பதே இல்லை, அந்த பிக்ஷடனரை வைத்த கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருக்கின்றனர். உடனே அந்த ரிஷிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஈசனை தாக்கினர். இறுதியில்  ஈசன் அவர்களை வென்று நடராஜ கோலத்தில் அவர்களுக்கு காட்சி அளித்தார்.  ரிஷிகளும் அவர்களுடைய அகங்காரத்தை விட்டொழித்து ஈசனை வணங்கினர். ஆனால், ரிஷிகள் தன்னுடைய பத்தினிகள் அனைவரும் ஈசனுடைய சுந்தர அழகில் மயங்கி  தங்களுடைய தர்மத்தை ஒழுங்கக செய்யாத காரணத்தினால், ஈசனுக்கு "தன்னுடைய சுந்தர அழகும், தன் கம்பீரமான ஆண்மை தோற்றமும் இழக்கட்டும்" என்று சாபம் அளித்தனர். ஈசன் அந்த சாபம் போக்கவே இந்த பிலத்தில் கடும் தவம் இயற்றியதாக கூறினார். இப்பொழுது தேவர்கள் இந்த இடத்தில் அப்படி என்ன மஹிமை இருக்கிறது என்று வினவினார்கள். அதற்க்கு ஈசன் இந்த பூமி கோவடிவம் கொண்டது. கோவின் முகம் "கோமுக்" என்னும் க்ஷேத்திரமாகும், கோவின் தொண்டை பகுதி "இமாலயம்" என்னும் க்ஷேத்திரமாகும், வயிற்று பகுதி "கேதார்நாத்" என்னும் க்ஷேத்திரமாகும், கோவின் தலை பகுதி "ஸ்ரீபுரம்" என்னும் க்ஷேத்திரமாகும், முதுகு பகுதி "வாரணாசி" என்னும் க்ஷேத்திரமாகும், வால் பகுதி "திருவாரூர்" என்னும் க்ஷேத்திரமாகும். நாம் அனைவரும் நின்று கொண்டிருக்கும் இந்த பிளம் கோவினுடைய நாபி பகுதி ஆகும். இந்த இடத்தில் இருந்து தான் அவள் இந்த பூமியில் உள்ள அணைத்து ஜீவராசிகளையும் போஷித்து வருகிறாள். அதுவே இந்த இடத்தின் மஹிமை என்று கூறினார். இப்பொழுது நீங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறீர்கள், இங்கு நீங்கள் அனைவரும் லோகமாதாவை நினைத்து யோக சாதனம் செய்யுங்கள், அவள் உங்களுக்கு அருள் கடாக்ஷம் பொழிவால் என்று கூறினார். மேலும் ஈசன் தேவர்கள் அனைவரையும் கிளி வடிவம் எடுத்து அருகிலிருக்கும் சம்பக மரத்தில் தியான சாதனத்தை தொடங்கும்படி  கூறி மறைந்தார். 







வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

நந்தனார் சரித்திரம்- Part 1

 

நந்தனார் சரித்திரம்




நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சரித்திரத்தை அறியாதவர் யாருமில்லை. தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் என்றும் ஈஸ்வர சிந்தனை உடையவர். அவர் ஈசனை அனுதினமும் தன் சிந்தையிலும் செயலிலும் அனுபவித்து லயித்து கொண்டிருப்பார். அவர் கூலி வேலை செய்த போதிலும் சரி, தன் குல தொழில் வேலையானாலும் சரி ஈஸ்வர சிந்தையிலே லயித்து இருப்பார். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஆதனுர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் சிவாலயங்களில் ஒலிக்கும் இசை கருவிகளான மத்தளம், வீணை போன்றவற்றிற்கு தோலும், நரம்பும் முறையே சுத்தம் செய்து கொடுத்து வந்தார். இவர் நாள்தோறும் அந்தி வேலையில் சிவாலயத்துக்கு சென்று தூரத்தில் இருந்து மனம் கசிந்து சிவனை பாடி, ஆடி வருவார். எவ்வாறு? இதோ கோபாலக்ரிஷ்ண பாரதியார் "நந்தனார் சரித்திரத்தில்" இவ்வாறு பாடுவார்,

“வார் இருக்குது தோல் இருக்குது வாங்கி கொள்ளுவீரே 

மத்தளங்கள் பேரிகைக்கும் வீணைக்கும் நல்ல இறுக்கி கட்டும், இசை வார் இருக்குது தோல் இருக்குது வாங்கி கொள்ளுவீரே!

சிறியவன் நான், சாதியொன்றும் அறியேன் நான், ஏழை சிவபெருமானுக்கு அடியேன் செய்யும் பணிவிடை இது”

இவ்வாறு அழகாக இசை கருவிகளுக்கு தேவைப்படும் தோலையும் வாரையும் கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தரிடும் கொடுத்து அனுப்புவார்.

ஒரு நாள் இவருக்கு, திருப்புங்கூரில் வீற்றிருக்கும் சிவலோகநாதனை  தரிசித்து வர வேண்டும் என்று ஆசை தோன்றியது. அது அவருடைய ஆசையா அல்லது ஈசனின் ஆசையா என்று யார் அறிவார்?  ஆனால் அன்று அவர் மனம் தான் மட்டும் ஈசனை கண்டு வணங்கி வர மனமில்லை. அவர் தன் ஊர் மக்குளும், தன்னுடன் வந்து ஈசனின் பேரருளை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார். முறையே ஊர்மக்களிடம் தன் விருப்பத்தை கூறி தன்னுடன் வரும்படி வேண்டினார். அனால் பெரும்பாலோனோர் “இவனுக்கு  சித்தம் கலங்கிருக்கு, இவனுக்கு சிவபித்து பிடித்துருக்கு, நம் குலத்திற்கு சிவதரிசனமா? என்றெல்லாம் கூறி வரமறுத்தனர். ஆனால் நந்தனின் மனம் வாடுமே என்று பதினோரு பேர் நந்தனுடன் வர சம்மதித்தனர். நந்தன் தன்னுடன் வந்த பதினோரு பேருடன் திருப்புங்கூர் சென்றார். 

திருப்புங்கூரில் வீற்றிருக்கும் ஈசனுக்கு சிவலோகநாதன் என்று திருநாமம். நந்தனார் சிவ தரிசனம் செய்யும் முறை வினோதமானது. அவர் கோயிலுக்கு உள்ளே செல்ல மாட்டார். பிரகாரம் சுற்ற மாட்டார். பதிலாக திருக்கோயில் இருக்கும் மாட வீதியை வலம் வருவார். திருக்கோயிலின் தேரடி வீதியில் இருந்தே சிவ தரிசனம் செய்வார். சிவ கைங்கர்யமான இசை கருவிகளுக்கு தோல் மற்றும் வார் போன்றவற்றை கோயிலுக்கு உள்ளெ செல்பவரிடம் கொடுத்து இறைவனுக்கு சமர்ப்பிக்க சொல்வார். இன்றைய காலகட்டத்தில் கோயிலுக்கு காணிக்கையாக ஒரு மணி போன்ற இசை கருவி கொடுத்தால் கூட, கொட்டை எழுத்தில் “உபயம்  இன்னார்” என்று விளம்பரம் செய்து கொள்வர். ஆனால் நந்தனாருக்கோ ஈஸ்வர கைங்கர்யமே பிரதானமானது. அப்படிப்பட்ட நந்தனார் தன் ஊர் மக்கள் பதினோரு பேரை அழைத்து கொண்டு திருப்புன்கூரில் வீற்றிருக்கும் சிவலோகநாதனை தரிசிக்க வந்துவிட்டார். நந்தனார் தேரடி வீதியில் இருந்து சிவ தரிசனம் செய்ய ஆவலுடன் தன் ஊர் மக்களுடன் எட்டி பார்த்தார், ஆனால் சந்நிதி முன் வீற்றிருக்கும் பெரிய நந்தி உருவம் ஈசனை கானா வண்ணம் மறைத்திருந்தது. நந்தன் மனமோ வாடியது. தன் கூட தரிசனத்திற்காக வந்த ஊர் மக்கள் நந்தனை பரிகாசம் செய்தனர். என்ன நந்தா! உன்னை நம்பி வந்தோம் சிவ தரிசனம் காண முடியவில்லையே என்றனர். நந்தனார் மனமுருகி ஈசனிடம் வேண்டினார் “ஐயா! உன்னை காண ஆதனுரில் இருந்து கால் கடுக்க வந்திருக்கிறோம், தரிசனம் தரமாட்டீரோ! உங்கள் தரிசனத்துக்கு நான் தகுதியற்றவன் என்று நினைக்கிறீரோ! சிவ தரிசனம் கண்டு உன் மகிமையை அறிந்திட  நான் மட்டும் வரவில்லை! உன்னை நம்பி என் ஊர் மக்கள் பதினோரு பேரையும் அழைத்து வந்திருக்கிறேன்! தரிசனம் தரமாட்டீரோ! உன் தரிசனம் கானா வண்ணம் பெரிய மாடு ஒன்று படுத்திருக்குது ஐயனே, நான் என்ன செய்வேன். நந்தனின் குமுறலை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார் 

வழிமறைத்திருக்குதே!

மலைபோல் ஒரு மாடு படுத்திருக்குதே!

பாவி பறையன் இந்த ஊரில் வந்தும், இவன்!

பாவந்தீரேனோ உந்தன் பாதத்தில் சேரேனோ!

சிவலோகநாதா வழிமறைத்திருக்குதே!

மலைபோல் ஒரு மாடு படுத்திருக்குதே!

தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்!

கோவில் உள்ளே வர மாட்டேன் ஐயே!

ஓரடி விலகினால் போதும்!

இங்கே நின்று  உற்று பார்க்க!

சற்றே விலகாதோ மாடு!

எவ்வளவு அற்புதமான வரிகள். தன் மன வேதனையை, தன் கோரிக்கையை ஈசன் திருவடியில் போட்டுவிட்டார். உன்முன்னே படுத்திருக்கும் மாடு ஓரடி விலகினால் போதும், நானும் என் ஊர் மக்களும் உன் தரிசனத்தை கண்டு விடுவோம். கருணைபொழி! என்று கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டி கொண்டார். பெரும் சிவபக்தரான, சிவலோகத்துக்கே காவல்காரரான நந்திதேவரை, "மாடு" என்று அழைத்தவர் நந்தனார் மட்டுமே. தன் பக்தன் மனம் வருந்தினாள் இறைவன் மனம் தாலுமோ! நந்தி தேவரை அழைத்தார், என் பக்தன், நந்தன், என் தரிசனம் காண வேண்டி தேரடி வீதியில் நின்று கொண்டிருக்கிறான். அவன் என்னை தரிசனம் காணும் வண்ணம், நந்தி தேவா! நீ ஓரடி விலகுமப்பா என்று வேண்டினார். நந்திதேவரோ அய்யனே உன்னை காண தேவாதி தேவர்கள் வந்து தரிசித்த போதும் நான் விலகியதில்லை. இந்த பூலோகத்திலோ, மன்னாதி மன்னர்கள் வந்த போதும் நான் விலகியதில்லை. என்றும் உங்கள் எதிரிலையே நின்று உங்களை காண வரம் பெற்ற என்னை, இன்று விலக சொல்வது நியாயமோ! என்றார். அதற்க்கு இறைவன், நந்தி தேவா, வந்திருப்பவன் உன்னை போலவே என்மீது அதீத பக்தி கொண்டவன். எதைவேண்டுமானாலும் யான் பொறுப்போம், ஆனால் என் பக்தனின் மனவேதனையை என்னால் பொறுக்க இயலாது. ஆகவே நீ சற்றே விலகியிரும். இதனை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார். 

சற்றே விலகியிரும் பிள்ளாய்!

சன்னிதானம் மறைக்குதாம்!

நீ சற்றே விலகியிரும் பிள்ளாய்!

நற்றவம் புரியும் நம்மிடம்,

திருநாளைப்போவார் வந்திருக்கிறார்!

சற்றே விலகியிரும் பிள்ளாய்!

சன்னிதானம் மறைக்குதாம்!

சாதி முறைமை பேசுறான்!

தன்பால்  இகழ்ந்தும் ஏசுரான்!

கோதிலாகுணமுடையோன்!

கோபண்கொண்டால் தாளமாட்டாய்!

பக்தியில் கரை கண்டவன்! என்னை 

பார்த்து பார்த்து உண்டவன்! அவன் 

சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும் 

தயவு செய்து சற்றே விலகியிரும் பிள்ளாய்!

சன்னிதானம் மறைக்குதாம்!

என்னே அற்புதமான வரிகள். சுவாமி தன் பக்தனின் பெருமையை இன்னொரு பக்தனுக்கு எடுத்துரைத்த அற்புதமான வரிகள். குற்றமில்லாத நற்குணங்களை உடையவன் அவன், அவன் மனக்குறை கொண்டால் நம் செல்வம் (சிவ செல்வமான தன்னுடைய  அடியார்)  முழுவதும் குறையும். தன் சுவாமி மனதை கண்டார் நந்தி,  தூர விலகி நின்றார். 

நந்தன் சிந்தை குளிர்ந்து அளவில்லாத ஆனந்தம் அடைந்து குதித்தார். கெக்கலித்தார், கொண்டாடினார், துதித்தார், எங்கும் சிவமாக பாவித்தார். இதனை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார். 

தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே

தரிசனம் செய்தார் தேன்மழைசொரிந்து 

வரிசையுடன் அவர் வாழிவாழி என்று 

தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே

குதித்து குதித்து கையை கும்பிடு போட்டு 

துதித்து துதித்து தன துன்பங்கள் தீர 

தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே

போற்றி போற்றி என்று பொன்னடி வனாகிப் 

பார்த்துப் பார்த்துப் பரமந்தங் கொண்டு 

தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே

அச்சமறந்தவர் அறிவிலுணர்ந்தவர் 

இச்சையிழந்தவராய் சித்தராய் 

தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே

நந்தனார் தன் இறைவனை மனதார, உளமார, கண்ணார கண்டு உள்ளம் பூரித்தார். இறைவனின் கருணையை எண்ணி எண்ணி பூரித்தார். தன் மக்களை அணைத்து இறைவனின் கருணையை எண்ணி ஆனந்த கூத்தாடினார். தரிசனம் பண்ணிய பின்பு, அந்த வீதியில் இருக்கும் குட்டையை கண்டார். அவருக்கு இறைவனின் கருணைக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அந்த  குட்டையை, திருக்குளமாய் வெட்ட ஆசை தோன்றியது. இன்றைய சூழலில் அழகாக இருக்கும் திருகுலத்தை நாம் குட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நந்தனாருக்கோ ஒரு சிறிய குட்டையை பெரிய தெப்பக்குளமாக மாற்ற ஆசை தோன்றியது. இதை நாம் பெரிய குளமாக வெட்டினால், இறைவன் இந்த தெப்ப குளத்தில் வளம் வர மாட்டாரோ என்றெல்லாம் கற்பனை கொண்டார். தன்னுடன் வந்த பதினோரு பேருடன் சேர்ந்து குளம் வெட்ட தொடங்கினார். கையில் மண்வெட்டியும் இல்லை, கடப்பாரையும் இல்லை. வெறும் கையில் குளம் வெட்ட தொடங்கினர். 

தன பக்தன் தனக்காக திருப்பணி செய்தாலும், அவன் படும் துயரத்தை இறைவன் அரியமாட்டாரா என்ன!  சிவபெருமான், தன் மூத்த பிள்ளையான, விநாயகரை அழைத்தார். நந்தன் என்னுடைய கோயில் அருகே திருக்குளம் ஒன்று வெட்ட ஆசை கொண்டுள்ளான். ஆனால் அவனால் மட்டும் இந்த பெரிய காரியத்தை செய்ய இயலாது. அவனுக்கு சென்று குளம் வெட்ட நீ உதவி செய். பிள்ளையார், மண்வெட்டியும் கடப்பாரையும் எடுத்து கொண்டு குளம் வெட்டும் இடத்திற்கு வந்தார். 

இதனை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார். 

மாளாப் பிறவிபோக்கும் பிள்ளையார் வந்தார் 

நாளைப்போவார் "நீ யாரப்பா என்றார்"

பிள்ளையார் - "நான் உன் ஆளப்பா வந்தேன் என்றார்"

நாளைப்போவார் - "குட்டையை குளமாய் வெட்டுவேன் என்றார்"

பிள்ளையார்- "வெட்டினால் மிக புண்யம் என்றார்"

நந்தனாரிடம் உதவி எதாவது தேவையா என்று கேட்டார். ஆமாம் ஐயா! இறை திருப்பணி செய்கிறோம். உங்களால் முடிந்த உதவியை செய்யும். அதற்க்கு விநாயகர் கட்டாயமாக செய்கிறேன், பதிலுக்கு நீர் எனக்கு என்ன கூலி தருவீர். நந்தனார், அதற்க்கு என்ன! நீங்கள் செய்யும் வேலைக்கு ஒரு பதக்கு (அதாவது ஒரு மரக்கால்  அளவு) நெல் தருகிறேன் என்று கூறினார். பிள்ளையார் குளம் வெட்டும் வேலையை செய்ய தொடங்கினார். பொழுது மறைய தொடங்கியது. நந்தனாரும் அவருடன் வந்த பதினோரு பேரும் ஆதனுர் திரும்ப முற்பட்டனர். விநாயகர், நீங்கள் ஊரை விட்டு சென்றுவிட்டாள் நான் எவ்விதம் என் கூலியை வாங்கிக்கொள்வது என்றார். நந்தனார் நான் என் ஊர் சென்று, உங்கள் கூலியான பதக்கு நெல்லை, நாளை இந்த குளம் வெட்டும் இடத்துக்கே வந்து தருகிறோம் என்று கூறி புறப்பட்டார். நந்தனார் மறுநாள், பதக்கு நெல்லை எடுத்து தலையில் வைத்து கொண்டு திருப்புங்கூரில், குளம் வெட்டும் இடத்திற்கு சென்றார். அங்கு ஒரு அழகிய திருக்குளம் ஒன்றை விநாயகர் அமைத்திருந்தார். நந்தனார் தான் கொண்டுவந்த பதக்கு நெல் மூட்டையை விநாயகரிடம் ஒப்படைத்தார். இதனால்  திருப்புன்கூரில் சிவலோகநாதன் கோயிலில் இருக்கும் பிள்ளையாருக்கு, "குளம் வெட்டிய பிள்ளையார்" என்ற பேர் வந்தது.

இவ்வாறே, திருப்புன்கூரில் இருந்து புறப்படுகையில், சிதம்பர நடராசர் பற்றிய  சொற்பொழிவு  நடந்து கொண்டிருந்தது. நந்தனார் ஓரமாக நின்று கொண்டு சிதம்பர நடராசர் பற்றிய கதையை உற்று கவனித்து கொண்டிருந்தார். அன்றிலிருந்து  அவருக்கு சிதம்பர நடராசரை காணும் ஆவல் மேலோங்கியது.  ஒவ்வொரு நாளும், நாளை சிதம்பரம் சென்று நடராசரை தரிசித்து விடலாம் என்று எண்ணி கொள்வார். அதனாலேயே அவருக்கு "திருநாளைப்போவார்" என்ற பெயர் வந்தது.  

 








நந்தனார் சரித்திரம்- Part 2

  நந்தனார் சரித்திரம்-  Part 2 நந்தனார் திருப்புங்கூர் சிவலோகநாதனைத் தரிசனம் செய்து  ஆதனூர் வந்த நாள் முதலாய் உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாம...

Thiruvannamalai Girivalam benefits