குங்கிலியக் கலய நாயனார்
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான இவருக்கு 'குங்கிலியக் கலய நாயனார்' என்ற பெயர் எப்படி வந்தது என்று பாப்போம். இவருடைய இயற்பெயர் 'கலய'. இவர் திருக்கடையூரில் ஒரு அந்தண குடுமபத்தில் பிறந்தார். இவருக்கு திருக்கடையூரில் இருக்கும் அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் உள்ள ஈசன் பால் உள்ள அதீத பக்தியினால் தினமும் கோயிலில் குங்கிலிய புகை (அதாவது சாம்பிராணி) போடுவது வழக்கம். நல்ல செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலும் இந்த குங்கிலிய புகை போடும் தொண்டை நெடுங்காலம் செய்து வந்தார். அதனாலேயே இவருக்கு 'குங்கிலியக் கலய நாயனார்' என்ற பெயர் வந்தது. இறைவனார் இவரை சோதிக்க எண்ணினார். வறுமை அவரையும் அவர் குடும்பத்தையும் சூழ்ந்தது. வீட்டில் இருக்கும் விலையுர்ந்த பொருட்களை எல்லாம் விற்க முற்பட்டார். வறுமையிலும் தன்னுடைய குங்கிலிய புகை போடும் தொண்டை தொடர்ந்தார். ஒரு நாள் வறுமை அவர்களை மிகவும் வாட்டியது. விற்பதற்கு வீட்டில் ஒன்றுமில்லை. அவருடைய பெண்டிரும் மக்களும் பசியால் வாடினர். குங்கிலியக் கலய நாயனாரின் மனைவியிடம் அவர் கட்டின தாலியை தவிர வேறு பொருள் எதுவும் இல்லை. குழந்தைகளின் பசியை போக்குவதற்காக தன்னுடைய தாலியை குங்கிலியக் கலய நாயனாரிடம் கொடுத்து அரிசி வாங்கி வர அனுப்பினார்.
குங்கிலியக் கலய நாயனார் அரிசி வாங்குவதற்காக சந்தை சென்றார். இறைவன் இவரை சோதிக்க எண்ணினார். ஈசன் குங்கிலிய வியாபாரம் செய்யும் ஒரு வணிகனாக உருமாறி, குங்கிலியம் விற்று கொண்டு வந்தார். குங்கிலியக் கலய நாயனார் அரிசி வாங்குவதற்காக அரிசி கடையில் நின்று கொண்டு இருந்தார். நம் அருகில் எதோ குங்கிலிய வாசனை வருகிறதே என்று திரும்பி பார்த்தார். ஒரு வணிகன் கூடை நிறைய குங்கிலியம் விற்று கொண்டு வருவதை பார்த்தார். மனம் இறைவனுக்கு செய்யும் கைங்கரியம் பால் திரும்பியது. வறுமையும் மறந்து போனது. மனைவி எதற்காக இந்த தாலியை கொடுத்தார் என்பதும் மறந்து போனது. குங்கிலியம் விற்கும் வணிகனை நிறுத்தினார். அப்பா! இந்த ஒரு கூடை குங்கிலியத்திற்கு இந்த தாலி போதுமானதாக இருக்குமா? என்று கேட்டார். வந்திருப்பதோ ஈசன், ஆம் சரியாக இருக்கும் என்று தாலியை பெற்று கொண்டு கூடை குங்கிலியத்தையும் நாயனாரிடம் ஒப்படைத்தார்.
நாயனார் மிகுந்த சந்தோஷத்துடன் குங்கிலியத்தை வாங்கி கொண்டு அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலுக்கு சென்று கோயில் மடப்பள்ளியில் குங்கிலியத்தை சேர்த்தார். மனதிற்குள் மிகுந்த மகிழ்ச்சியும், சந்தோசமும். இன்னும் கொஞ்ச நாளைக்கு குங்கிலிய தொண்டுக்கு தடை இல்லை என்று மனம் தேற்றி கொண்டார். அப்படியே கோயிலில் கண் அசந்து தூங்கினார். அவர் மனைவி, கணவர் வருவார் என்று காத்திருந்து வாசலையே பார்த்திருந்தார். கணவர் வருவதாக தெரியவில்லை. பிள்ளைகளும் அவளும் பசி மயக்கத்திலேயே தூங்கி போனார்கள். உலகத்துக்கே படி அளக்கும் ஈசன் தன் தொண்டனையும், தொண்டன் குடும்பத்தையும் பசியால் வாடுவிடுவாரா என்ன?.
ஈசன் குங்கிலியக் கலய நாயனாரின் மனைவியின் கனவில் தோன்றினார். தாயே! எழுந்திரு உன் வீட்டில் சகல சம்பத்துகளும் இருக்கும்படி செய்தேன். குங்கிலியக் கலய நாயனாரின் மனைவி கண் விழித்து பார்த்தார். கனவா அல்லது நினைவா! வீடு முழுவதும் விலையுர்ந்த பொருட்களும், உணவு தானிய பொருட்களும் இருக்கின்றதே. எல்லாம் ஈசனின் கருணை என்று எண்ணி தன கணவருக்காக கரியமுது சமைக்க தயாரானாள். ஈசன் அதோடு விட வில்லை குங்கிலியக் கலய நாயனாரின் கனவிலும் சென்று, மகனே! எழுந்திரு, உன் மனைவி உனக்காக கரியமுது சமைத்து காத்து கொண்டிருக்கிறாள். சென்று வயிறார உன் என்று உரைத்தார். குங்கிலியக் கலய நாயனார் வீட்டை நோக்கி சென்றார். என்னே ஆச்சரியம் அவர் வீடு முழுவதும் செல்வம் நிறைந்து இருந்தது. மனைவிடம் கேட்டார், மனைவி தன்னுடைய கனவு பற்றி குங்கிலியக் கலய நாயனாரிடம் தெரிவித்தார். குங்கிலியக் கலய நாயனாரும் தன கனவில் வந்து ஈசன் தன்னை சாப்பிட வீட்டிற்கு செல்லுமாறு கூறியதையும் மணிவயிடம் சொன்னார். குங்கிலியக் கலய நாயனாரும் அவருடைய மனைவியும் ஈசனின் கருணையை நினைத்து மெய்யுருகி நின்றனர்.