Who am I ramana maharishi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Who am I ramana maharishi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஜனவரி, 2022

‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’ Translation by Sri Ramana Maharishi

 

ஸ்ரீசங்கர ஜெகத்குரு மேற்கு திக்கில் பயணம் செய்தபோது, ஸ்ரீவல்லி எனும் கிராமத்தில், பிரபாகர் எனும் அந்தணர், சங்கரரின் வரவை அறிந்து, தன் 13 வயது புத்திரனை அழைத்துக்கொண்டு போய், அவனை நமஸ்காரம் செய்ய வைத்து, தானும் நமஸ்கரித்து, சின்ன வயது முதல் பேச்சு வராதவனாக, எதிலும் நாட்டம் இல்லாதவனாக, விருப்பு - வெறுப்பு இல்லாதவனாக, எதிலும் பக்குவம் இல்லாதவனாக இருக்கிறவனுடைய நிலைமையைச் சொல்ல... ஸ்ரீசங்கரபகவத்பாதாள் அந்த பாலகனை அணைத்துக்கொண்டார். "குழந்தாய், நீ யார், யாருடைய மைந்தன் நீ, எங்கே சென்றுகொண்டு இருக்கிறாய், உன் பெயர் என்ன, நீ எங்கிருந்து வந்திருக்கிறாய்?" என்று மிகக் கூர்மையான பெரிய கேள்விகளைக் கேட்டார். அவரிடம் அந்த பாலகன், தன் நிலைமையைப் பற்றி வாய் திறந்து சொன்ன ஸ்லோகங்களே, ‘ஹஸ்தாமலக ஸ்தோத்திரம்’. வடமொழியில் அமைக்கப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார், பகவான் ஸ்ரீரமணர். நான் மனிதன் அல்ல. தேவனோ, யட்சனோ, அந்தணனோ, அரசனோ, மனிதனோ அல்ல; நான் பிரம்மசாரியும் அல்ல; கிரகஸ்தனும் அல்ல; பால பிராயனும் அல்ல; கிழவனுமல்ல; ஒட்டுமொத்த சந்நியாசியும் அல்ல; யார் ஒருவனும் நான் அல்லேன்; நான் சத்தியபோத ஞான சொரூபமானவன். இதுவல்ல, இதுவல்ல என்று சொல்லி, தான் ஆன்மா என்பதை மிக அழகாக, அந்த குழந்தை ஸ்லோகங்களாகப் பேசினான். ‘மேலே இருக்கிற சந்திரன், காற்றில் அசையும் அலைகளால் ஆடுவதைக் கண்டால், சந்திரன் ஆடுவது போல இருக்கும். ஆனால், சந்திரனா ஆடுகிறான்? இல்லை; இது கண் கொண்ட மயக்கம். இதே மயக்கம்தான் புத்திக்கு இருக்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் அந்நியர் என்று நினைத்துக்கொள்கிறது. புத்தி, எதிரே இருப்பவர் வேறு மதத்தவர், வேறு இனத்தவர், வேறு குலத்தவர் என்று நினைத்திருக்கிறது. உயர்வு என்றும், தாழ்வு என்றும் பிரித்துக்கொள்கிறது. இது புத்தியினுடைய ஆட்டம். மாயையான பார்வை. ஆனால், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிற அந்த விஷயம் பேதமற்றது. அதுதான் உன்னிலும் சகல இடத்திலும் பரவியிருக்கிறது. இதைத் தெரிந்துகொண்ட ஆன்மா நான்.’ பையன் சொன்ன ஸ்லோகங்களைப் பார்த்து, தந்தை பிரமித்து, புதல்வனை வெளிக்கொண்டு வந்த குருவை நோக்கிக் கைகூப்பி நிற்க, "இவனை மகனாக நீங்கள் அடைந்தது பாக்கியம். இவனால் உங்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை; இவன் என்னோடு இருக்கட்டும்" என்று அவனை அழைத்துக்கொண்டு போய்விட்டார். பகவத்பாதாளுடைய சீடர்கள், "குழந்தை ஏன் இப்படி இருந்தது? ஏன் இப்படி ஆயிற்று?" என்று கேட்க, "இந்தக் குழந்தையின் தாய் கங்கையில் குளிக்கப் போனபோது, ஒரு சாதுவிடம், இந்தக் குழந்தையைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளும்படி, ஒப்படைத்துவிட்டுப் போனாள். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே, அந்த குழந்தை கால் இடறி, கங்கையில் விழுந்து, மரணமடைந்துவிட்டது. குழந்தையை வாரி எடுத்த சாது, என்ன செய்வது, பெற்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கினார். பெற்றவள் அழக்கூடாது என்று தீர்மானித்து, தன் உடம்பைவிட்டு, இந்தக் குழந்தைக்குள் புகுந்துகொண்டார். அந்தச் சாதுவே, இந்தக் குழந்தை" என்று பகவத்பாதாள் சொன்னார். 

வியாழன், 16 செப்டம்பர், 2021

Who Am I - Ramana Maharishi

வேங்கடராமன் என்னும் மனிதம் எவ்வாறு ரமண மஹரிஷி என்று ஆனது.


திருவண்ணாமலை என்றால் எப்படி திருவண்ணாமலை ஈஸ்வரர் எல்லாருக்கும் தெரியுமோ அதே போல் ரமண மஹரிஷி பற்றி அறியாதவரும் இளர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் சுந்தரம் அழகம்மாள் என்னும் தம்பதிக்கு 1879-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 30-ம் தேதி மகனாக ரமண மஹரிஷி அவதரித்தார். பெற்றோர்கள் அவர்களுடைய குல தெய்வ பெயரான வேங்கடராமன் என்னும் பெயரை அவருக்கு வைத்தனர்.

ரமண மகரிஷியின் பிறப்பை பற்றி பாலகுமாரன் அவர்கள் எழுதிய ஶ்ரீ ரமண மஹரிஷி என்னும் புத்தகத்தில் அழகாக கூறுவார், அதாவது "உலகில் பிரளயம் ஏற்பட்டபோது, சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த, பிரளயம் சுழித்துக்கொண்டு அந்தப் பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் சுழித்து மறைந்ததால், அது திருச்சுழி. வெகு காலத்துக்குப் பிறகு, அதே சுழியில் இருந்து பிரளயம் ஒன்று வெளிப்பட்டது. அது அன்புப் பிரளயம். ரமணானுபவம். அது பொங்கி எழுந்து உலகையெல்லாம் நனைத்தது".

அதை நிரூபிக்கும் வண்ணம் அவருடைய ஜாதகமும் இருந்தது. துலாம் லக்னம், இரண்டாம் இடத்தில் புதன் சுக்ரணுடன். ஐந்தாம் இடத்தில் குரு, சனியின் கும்ப வீட்டில். ஆறாம் வீட்டில் சனி, குருவின் வீட்டான மீனத்தில். சனியும் குருவும் பரிவர்த்தனை யோகத்தில். பொதுவாக குருவும் சனியும் தொடர்பு கொண்டிருப்பின் அவர்கள் ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவர்களாக இருப்பர். அது போலவே சிறு வயதிலேயே வேங்கடராமன் ஆன்மீகத்தில் ஈடுபாடு உடயவராக இருந்தார். 

ஆனால், சுந்தரமய்யர் வீட்டுக்கு ஒரு சாபம் இருந்தது. உண்ண உணவும், படுக்க இடமும் கேட்ட ஒரு துறவியைப் பல தலைமுறைகளுக்கு முன்னால் விரட்டி அடித்ததால், அந்த வம்சத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் யாரோ ஒருவர் துறவியாகப் போவார் என்ற விதி இருந்தது. அதுபற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை.

சிறு வயதில் வேங்கடராமன் விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். கால்பந்து, கபடி, நீச்சல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

ஶ்ரீ ரமண மஹரிஷி பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை விவரித்த பாலகுமாரன் எழுதிய ஶ்ரீ ரமண மஹரிஷி என்னும் புத்தகத்தில் இருந்து சிலவற்றை பார்ப்போம். 

சிறு வயதில் வேங்கடராமனுக்கு தூக்கம் அதிகமாக வரும். ‘கும்பகர்ணா’, ‘தூங்குமூஞ்சி’ என்று அந்தச் சிறுவனைக் கடிந்து கொண்டார்கள். தூக்கம் வீட்டில் மட்டுமல்ல; வகுப்பறையிலும் வந்தது. தூங்கினால் காது திருகி, தலையில் குட்டி, ஆசிரியர் எழுப்புவார், அவமானப்படுத்துவார் என்பதால், குடுமியின் நுனியில் நூல் முடித்து, அந்த நூலை எடுத்து சுவரிலுள்ள ஆணியில் மாட்டிவிட்டு வேங்கடராமன் படித்துக்கொண்டிருப்பான். தூங்கி வழிந்தால், சட்டென்று குடுமி இழுபடும். விழித்துக்கொள்வான். எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் தூங்க முடியும் என்கிற வரப்பிரசாதம் இளம் வயதில் அவனுக்கு இருந்தது. 

பெரியபுராணத்தின் தாக்கம், அப்பாவின் மரணம், தான் எதற்கும் லாயக்கற்றவனோ என்ற அச்சம்... ஆகியவற்றால், தான் யார் என்ற வினா, பதினாறு வயது இளைஞனுக்குத் தோன்றியது. வேங்கடராமன் மரணம் பற்றி யோசித்தான். உயிருள்ளபோதே மரணத்தை அனுபவித்தான். எதை அறிந்தால் அறிவோ, அதை அறிந்தான்; எதை அடைந்தால் உயர்வோ, அந்த உயர்வை எட்டினான். இந்த மரண அனுபவத்துக்குப் பிறகு, என்ன செய்வது என்று வேங்கடராமனுக்குத் தெரியவில்லை. இந்த வாழ்க்கை கடும் குப்பை. சரி, இதை விட்டு எங்கே போவது? உள்ளே கேள்வி எழுந்தது. ‘அண்ணாமலை’ என்ற பெயர் தோன்றியது. இதற்கு முன் வீட்டுக்கு வந்தவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, ‘அண்ணாமலை’ என்று அவர் சொல்ல, உடம்பில் ஒரு பரவசம் தோன்றியதே, அது மறுபடியும் நினைவுக்கு வந்தது. அண்ணாமலைக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அது எழுந்தபோதே ஆனந்தம் பொங்கியது. யாரோ மிகத் தெரிந்தவர் அங்கு இருக்கிறார்; அவரைப் பார்க்கவேயில்லை; இப்போது போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தது. ஆனால், எப்படிப் போவது. காசு வேண்டுமே. முதலில், திருவண்ணாமலை எங்கிருக்கிறது என்று தெரியவேண்டும். மதுரையிலிருந்து திருவண்ணாமலைக்கு ரயில் மார்க்கத்தைத் தேடினான் வேங்கடராமன். அது பழைய ரயில் வரைபடம். திருவண்ணாமலைக்குப் போவதற்கு ரயில் இருப்பது தெரிந்தது. திண்டிவனம்தான் திருவண்ணாமலைக்கு அருகே இருக்கிற ஊர் என்று வேங்கடராமன் நினைத்துக்கொண்டு, திருவண்ணாமலைக்குப் போக எத்தனை காசு என்று கணக்கிடும்போது, ‘மூன்று ரூபாய் இருக்கும்’ என்ற எண்ணம் வந்தது. சரி, மூன்று ரூபாய்க்கு என்ன வழி என்று யோசித்தபோது, வெளியே போய் யோசிக்கலாமே என்று தோன்றியது. "மின்சாரம் பற்றிய தனி வகுப்பு இருக்கிறது. நான் கிளம்புகிறேன்" என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, வேங்கடராமன் எழுந்தான். "அப்படியா... கீழே பெட்டியில் ஐந்து ரூபாய் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக்கொண்டு போய் என் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டிவிடு" என்றான் அண்ணா. அண்ணாமலைக்குப் போக, காசுக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது, அண்ணன் மூலமாக இப்போது ஐந்து ரூபாய் கிடைத்திருக்கிறதே என்று சந்தோஷப்பட்டான் வேங்கடராமன். திண்டிவனம் போக மூன்று ரூபாய்தானே ரயில் செலவு. அது போதும் என்று நினைத்து, வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்து, அண்ணனுக்குக் கடிதம் எழுதினான். இந்த உலகில் எழுதப்பட்ட பல கடிதங்களில் மிகச் சுருக்கமானதும், மிகச் சுவையானதுமான கடிதம் அது. சத்தியத்தில் நனைந்த வார்த்தைகள் அவை. மூன்று ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி இரண்டு ரூபாயுடன் தமையன் நாகசுவாமிக்கு தம்பி வேங்கட ராமன் கடிதம் எழுதினான்.

"என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பிவிட்டேன். இது நல்ல காரியத்தில் பிரவேசித்திருக்கிறது. ஆகையால், இந்தக் காரியத்துக்கு ஒருவரும் விசனப்படவேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்யவேண்டாம். உன் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. ரூபாய் 2 இதோடு இருக்கிறது". இப்படிக்கு _ -என்று எழுதி, வெறும் கோடு மட்டும் கிழித்தான். பெயர் எழுதவில்லை. துண்டுக் காகிதத்தில், பென்சிலால் எழுதப்பட்ட கடிதம் அது. இந்தக் கடிதம் எவ்வாறோ மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, இப்போதும் ரமணாஸ்ரமத்தில் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.


மேலும் அவரை பற்றி முழுமயாக தெரிந்துகொள்ள பாலகுமாரன் அவர்கள் எழுதிய ' ஶ்ரீ ரமண maharishi' என்னும் புத்தகம் Amazon Kindle edition இல் கிடைக்கிறது. அந்த புத்தகத்தை நீங்களும் வாங்கி  ரமணானுபவம் பெற்றிடுங்கள்.




  PIXXEL: CAPTURING EARTH'S ESSENCE FROM THE SKY In today's world most of the mobile buyers used to buy mobile phones with best pixe...