ரமண மகரிஷியின் ஹஸ்த தீட்சை
1908-ல் பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் இருந்து விடைபெற்று, காவிய கண்ட கணபதி சாஸ்திரி திருவொற்றியூருக்குப் பயணமானார். அங்கே, விநாயகர் கோயிலில் தங்கிக்கொண்டு, தன் தவத்தைத் தொடர்ந்தார். பிற்பகல் ஒன்றில் விழித்தபடி படுத்திருந்தபோது, அவருக்கு அருகே யாரோ அமர்வதுபோல் இருந்தது. யார் என்று பார்த்தபோது, பகவான் ஸ்ரீரமண மகரிஷி தன் உள்ளங்கையை, காவிய கண்ட கணபதியின் தலையில் அழுத்தி வைத்திருந்தார். பகவானின் உள்ளங்கை பட்டதும், கணபதி சாஸ்திரிக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் உணர்வு ஏற்பட்டது. 1908-ல் நடந்த இந்த விஷயத்தை, 1929-ல் அன்பர் ஒருவர், "கணபதி சாஸ்திரியாருக்கு திருவெற்றியூர் வந்து ஹஸ்த தீட்சை கொடுத்தீர்களாமே?" என்று கேட்டபோது, பகவான், "ஆமாம், ஒரு நாள் திடீரென்று எங்கோ இந்த இடம் விட்டு மேலே பறப்பது போல் தோன்றியது மேலே எழுந்ததும், காட்சிகள் மறைந்தன. இடம் முழுவதும் வெள்ளையாயிற்று, ஏதோ ஓர் இடத்துக்கு நகர்கிறோம் என்ற உணர்வு இருந்தது. பிற்பாடு மெல்லக் காட்சிகள் தெரிந்தன. நான் கீழே இறங்கி நின்றேன். அந்த இடம் ஒரு நெடுஞ்சாலையாக இருந்தது. அந்த இடத்தில், நான் நடந்து போனேன். அங்கே ஒரு விநாயகர் கோயில் இருந்தது. உள்ளே போய் சிறிது நேரம் யாரோடு பேசினேன், என்ன பேசினேன் என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடம் திருவெற்றியூர் என்றும், சிவன் கோயிலுக்கு அருகே இருக்கிற விநாயகர் கோயில் என்றும் மனசுக்குத் தோன்றியது. மறுபடியும் கண் விழித்துப் பார்த்தபோது, திருவண்ணாமலையில் இருந்தேன்" என்று சர்வ சாதாரணமாக, எந்தவிதக் கர்வமுமின்றி அந்த விஷயத்தை வெளிப்படுத்தினார். வான் மார்க்கமாகப் போய், தன் அன்பருக்குக் கொடுத்த ஹஸ்த தீட்சையைத் தான் தந்ததாக ஒருபோதும் அவர் சாதித்துக் கொள்ளவில்லை. தன்னால் அவ்விதம் செய்ய முடியும் என்று பறைசாற்றிக்கொள்ளவில்லை. அது பற்றி அவராக வாய் திறக்கவும் இல்லை. காவிய கண்ட கணபதி, இது பற்றி அன்பர்களிடம் சொல்லி, அந்த அன்பர்கள் வினவிய பின்பு, அதாவது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்குப் பிறகு, ‘ஆமாம், அப்படி நடந்தது’ என்று, மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அதை மறைக்கவும் இல்லை; தன்னால் அப்படிச் செய்யமுடிந்தது என்று கொண்டாடிக்கொள்ளவும் இல்லை. என்னவோ அப்படி நடந்தது என்று மிக எளிமையான விஷயமாக அதைச் சொல்கிறார்.