நந்தனார் சரித்திரம்
நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் சரித்திரத்தை அறியாதவர் யாருமில்லை. தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும் என்றும் ஈஸ்வர சிந்தனை உடையவர். அவர் ஈசனை அனுதினமும் தன் சிந்தையிலும் செயலிலும் அனுபவித்து லயித்து கொண்டிருப்பார். அவர் கூலி வேலை செய்த போதிலும் சரி, தன் குல தொழில் வேலையானாலும் சரி ஈஸ்வர சிந்தையிலே லயித்து இருப்பார். அவர் தமிழ்நாட்டில் உள்ள ஆதனுர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் சிவாலயங்களில் ஒலிக்கும் இசை கருவிகளான மத்தளம், வீணை போன்றவற்றிற்கு தோலும், நரம்பும் முறையே சுத்தம் செய்து கொடுத்து வந்தார். இவர் நாள்தோறும் அந்தி வேலையில் சிவாலயத்துக்கு சென்று தூரத்தில் இருந்து மனம் கசிந்து சிவனை பாடி, ஆடி வருவார். எவ்வாறு? இதோ கோபாலக்ரிஷ்ண பாரதியார் "நந்தனார் சரித்திரத்தில்" இவ்வாறு பாடுவார்,
“வார் இருக்குது தோல் இருக்குது வாங்கி கொள்ளுவீரே
மத்தளங்கள் பேரிகைக்கும் வீணைக்கும் நல்ல இறுக்கி கட்டும், இசை வார் இருக்குது தோல் இருக்குது வாங்கி கொள்ளுவீரே!
சிறியவன் நான், சாதியொன்றும் அறியேன் நான், ஏழை சிவபெருமானுக்கு அடியேன் செய்யும் பணிவிடை இது”
இவ்வாறு அழகாக இசை கருவிகளுக்கு தேவைப்படும் தோலையும் வாரையும் கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தரிடும் கொடுத்து அனுப்புவார்.
ஒரு நாள் இவருக்கு, திருப்புங்கூரில் வீற்றிருக்கும் சிவலோகநாதனை தரிசித்து வர வேண்டும் என்று ஆசை தோன்றியது. அது அவருடைய ஆசையா அல்லது ஈசனின் ஆசையா என்று யார் அறிவார்? ஆனால் அன்று அவர் மனம் தான் மட்டும் ஈசனை கண்டு வணங்கி வர மனமில்லை. அவர் தன் ஊர் மக்குளும், தன்னுடன் வந்து ஈசனின் பேரருளை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார். முறையே ஊர்மக்களிடம் தன் விருப்பத்தை கூறி தன்னுடன் வரும்படி வேண்டினார். அனால் பெரும்பாலோனோர் “இவனுக்கு சித்தம் கலங்கிருக்கு, இவனுக்கு சிவபித்து பிடித்துருக்கு, நம் குலத்திற்கு சிவதரிசனமா? என்றெல்லாம் கூறி வரமறுத்தனர். ஆனால் நந்தனின் மனம் வாடுமே என்று பதினோரு பேர் நந்தனுடன் வர சம்மதித்தனர். நந்தன் தன்னுடன் வந்த பதினோரு பேருடன் திருப்புங்கூர் சென்றார்.
திருப்புங்கூரில் வீற்றிருக்கும் ஈசனுக்கு சிவலோகநாதன் என்று திருநாமம். நந்தனார் சிவ தரிசனம் செய்யும் முறை வினோதமானது. அவர் கோயிலுக்கு உள்ளே செல்ல மாட்டார். பிரகாரம் சுற்ற மாட்டார். பதிலாக திருக்கோயில் இருக்கும் மாட வீதியை வலம் வருவார். திருக்கோயிலின் தேரடி வீதியில் இருந்தே சிவ தரிசனம் செய்வார். சிவ கைங்கர்யமான இசை கருவிகளுக்கு தோல் மற்றும் வார் போன்றவற்றை கோயிலுக்கு உள்ளெ செல்பவரிடம் கொடுத்து இறைவனுக்கு சமர்ப்பிக்க சொல்வார். இன்றைய காலகட்டத்தில் கோயிலுக்கு காணிக்கையாக ஒரு மணி போன்ற இசை கருவி கொடுத்தால் கூட, கொட்டை எழுத்தில் “உபயம் இன்னார்” என்று விளம்பரம் செய்து கொள்வர். ஆனால் நந்தனாருக்கோ ஈஸ்வர கைங்கர்யமே பிரதானமானது. அப்படிப்பட்ட நந்தனார் தன் ஊர் மக்கள் பதினோரு பேரை அழைத்து கொண்டு திருப்புன்கூரில் வீற்றிருக்கும் சிவலோகநாதனை தரிசிக்க வந்துவிட்டார். நந்தனார் தேரடி வீதியில் இருந்து சிவ தரிசனம் செய்ய ஆவலுடன் தன் ஊர் மக்களுடன் எட்டி பார்த்தார், ஆனால் சந்நிதி முன் வீற்றிருக்கும் பெரிய நந்தி உருவம் ஈசனை கானா வண்ணம் மறைத்திருந்தது. நந்தன் மனமோ வாடியது. தன் கூட தரிசனத்திற்காக வந்த ஊர் மக்கள் நந்தனை பரிகாசம் செய்தனர். என்ன நந்தா! உன்னை நம்பி வந்தோம் சிவ தரிசனம் காண முடியவில்லையே என்றனர். நந்தனார் மனமுருகி ஈசனிடம் வேண்டினார் “ஐயா! உன்னை காண ஆதனுரில் இருந்து கால் கடுக்க வந்திருக்கிறோம், தரிசனம் தரமாட்டீரோ! உங்கள் தரிசனத்துக்கு நான் தகுதியற்றவன் என்று நினைக்கிறீரோ! சிவ தரிசனம் கண்டு உன் மகிமையை அறிந்திட நான் மட்டும் வரவில்லை! உன்னை நம்பி என் ஊர் மக்கள் பதினோரு பேரையும் அழைத்து வந்திருக்கிறேன்! தரிசனம் தரமாட்டீரோ! உன் தரிசனம் கானா வண்ணம் பெரிய மாடு ஒன்று படுத்திருக்குது ஐயனே, நான் என்ன செய்வேன். நந்தனின் குமுறலை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார்
வழிமறைத்திருக்குதே!
மலைபோல் ஒரு மாடு படுத்திருக்குதே!
பாவி பறையன் இந்த ஊரில் வந்தும், இவன்!
பாவந்தீரேனோ உந்தன் பாதத்தில் சேரேனோ!
சிவலோகநாதா வழிமறைத்திருக்குதே!
மலைபோல் ஒரு மாடு படுத்திருக்குதே!
தேரடியில் நின்று தரிசித்தாலும் போதும்!
கோவில் உள்ளே வர மாட்டேன் ஐயே!
ஓரடி விலகினால் போதும்!
இங்கே நின்று உற்று பார்க்க!
சற்றே விலகாதோ மாடு!
எவ்வளவு அற்புதமான வரிகள். தன் மன வேதனையை, தன் கோரிக்கையை ஈசன் திருவடியில் போட்டுவிட்டார். உன்முன்னே படுத்திருக்கும் மாடு ஓரடி விலகினால் போதும், நானும் என் ஊர் மக்களும் உன் தரிசனத்தை கண்டு விடுவோம். கருணைபொழி! என்று கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டி கொண்டார். பெரும் சிவபக்தரான, சிவலோகத்துக்கே காவல்காரரான நந்திதேவரை, "மாடு" என்று அழைத்தவர் நந்தனார் மட்டுமே. தன் பக்தன் மனம் வருந்தினாள் இறைவன் மனம் தாலுமோ! நந்தி தேவரை அழைத்தார், என் பக்தன், நந்தன், என் தரிசனம் காண வேண்டி தேரடி வீதியில் நின்று கொண்டிருக்கிறான். அவன் என்னை தரிசனம் காணும் வண்ணம், நந்தி தேவா! நீ ஓரடி விலகுமப்பா என்று வேண்டினார். நந்திதேவரோ அய்யனே உன்னை காண தேவாதி தேவர்கள் வந்து தரிசித்த போதும் நான் விலகியதில்லை. இந்த பூலோகத்திலோ, மன்னாதி மன்னர்கள் வந்த போதும் நான் விலகியதில்லை. என்றும் உங்கள் எதிரிலையே நின்று உங்களை காண வரம் பெற்ற என்னை, இன்று விலக சொல்வது நியாயமோ! என்றார். அதற்க்கு இறைவன், நந்தி தேவா, வந்திருப்பவன் உன்னை போலவே என்மீது அதீத பக்தி கொண்டவன். எதைவேண்டுமானாலும் யான் பொறுப்போம், ஆனால் என் பக்தனின் மனவேதனையை என்னால் பொறுக்க இயலாது. ஆகவே நீ சற்றே விலகியிரும். இதனை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார்.
சற்றே விலகியிரும் பிள்ளாய்!
சன்னிதானம் மறைக்குதாம்!
நீ சற்றே விலகியிரும் பிள்ளாய்!
நற்றவம் புரியும் நம்மிடம்,
திருநாளைப்போவார் வந்திருக்கிறார்!
சற்றே விலகியிரும் பிள்ளாய்!
சன்னிதானம் மறைக்குதாம்!
சாதி முறைமை பேசுறான்!
தன்பால் இகழ்ந்தும் ஏசுரான்!
கோதிலாகுணமுடையோன்!
கோபண்கொண்டால் தாளமாட்டாய்!
பக்தியில் கரை கண்டவன்! என்னை
பார்த்து பார்த்து உண்டவன்! அவன்
சித்தங்குறையில் நமது செல்வம் முற்றுங்குறையும்
தயவு செய்து சற்றே விலகியிரும் பிள்ளாய்!
சன்னிதானம் மறைக்குதாம்!
என்னே அற்புதமான வரிகள். சுவாமி தன் பக்தனின் பெருமையை இன்னொரு பக்தனுக்கு எடுத்துரைத்த அற்புதமான வரிகள். குற்றமில்லாத நற்குணங்களை உடையவன் அவன், அவன் மனக்குறை கொண்டால் நம் செல்வம் (சிவ செல்வமான தன்னுடைய அடியார்) முழுவதும் குறையும். தன் சுவாமி மனதை கண்டார் நந்தி, தூர விலகி நின்றார்.
நந்தன் சிந்தை குளிர்ந்து அளவில்லாத ஆனந்தம் அடைந்து குதித்தார். கெக்கலித்தார், கொண்டாடினார், துதித்தார், எங்கும் சிவமாக பாவித்தார். இதனை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார்.
தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே
தரிசனம் செய்தார் தேன்மழைசொரிந்து
வரிசையுடன் அவர் வாழிவாழி என்று
தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே
குதித்து குதித்து கையை கும்பிடு போட்டு
துதித்து துதித்து தன துன்பங்கள் தீர
தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே
போற்றி போற்றி என்று பொன்னடி வனாகிப்
பார்த்துப் பார்த்துப் பரமந்தங் கொண்டு
தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே
அச்சமறந்தவர் அறிவிலுணர்ந்தவர்
இச்சையிழந்தவராய் சித்தராய்
தரிசனம் செய்தாரே நந்தனார் தரிசனம் செய்தாரே
நந்தனார் தன் இறைவனை மனதார, உளமார, கண்ணார கண்டு உள்ளம் பூரித்தார். இறைவனின் கருணையை எண்ணி எண்ணி பூரித்தார். தன் மக்களை அணைத்து இறைவனின் கருணையை எண்ணி ஆனந்த கூத்தாடினார். தரிசனம் பண்ணிய பின்பு, அந்த வீதியில் இருக்கும் குட்டையை கண்டார். அவருக்கு இறைவனின் கருணைக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அந்த குட்டையை, திருக்குளமாய் வெட்ட ஆசை தோன்றியது. இன்றைய சூழலில் அழகாக இருக்கும் திருகுலத்தை நாம் குட்டையாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நந்தனாருக்கோ ஒரு சிறிய குட்டையை பெரிய தெப்பக்குளமாக மாற்ற ஆசை தோன்றியது. இதை நாம் பெரிய குளமாக வெட்டினால், இறைவன் இந்த தெப்ப குளத்தில் வளம் வர மாட்டாரோ என்றெல்லாம் கற்பனை கொண்டார். தன்னுடன் வந்த பதினோரு பேருடன் சேர்ந்து குளம் வெட்ட தொடங்கினார். கையில் மண்வெட்டியும் இல்லை, கடப்பாரையும் இல்லை. வெறும் கையில் குளம் வெட்ட தொடங்கினர்.
தன பக்தன் தனக்காக திருப்பணி செய்தாலும், அவன் படும் துயரத்தை இறைவன் அரியமாட்டாரா என்ன! சிவபெருமான், தன் மூத்த பிள்ளையான, விநாயகரை அழைத்தார். நந்தன் என்னுடைய கோயில் அருகே திருக்குளம் ஒன்று வெட்ட ஆசை கொண்டுள்ளான். ஆனால் அவனால் மட்டும் இந்த பெரிய காரியத்தை செய்ய இயலாது. அவனுக்கு சென்று குளம் வெட்ட நீ உதவி செய். பிள்ளையார், மண்வெட்டியும் கடப்பாரையும் எடுத்து கொண்டு குளம் வெட்டும் இடத்திற்கு வந்தார்.
இதனை கோபாலக்ரிஷ்ண பாரதியார் அழகாக பின்வருமாறு பாடுவார்.
மாளாப் பிறவிபோக்கும் பிள்ளையார் வந்தார்
நாளைப்போவார் "நீ யாரப்பா என்றார்"
பிள்ளையார் - "நான் உன் ஆளப்பா வந்தேன் என்றார்"
நாளைப்போவார் - "குட்டையை குளமாய் வெட்டுவேன் என்றார்"
பிள்ளையார்- "வெட்டினால் மிக புண்யம் என்றார்"
நந்தனாரிடம் உதவி எதாவது தேவையா என்று கேட்டார். ஆமாம் ஐயா! இறை திருப்பணி செய்கிறோம். உங்களால் முடிந்த உதவியை செய்யும். அதற்க்கு விநாயகர் கட்டாயமாக செய்கிறேன், பதிலுக்கு நீர் எனக்கு என்ன கூலி தருவீர். நந்தனார், அதற்க்கு என்ன! நீங்கள் செய்யும் வேலைக்கு ஒரு பதக்கு (அதாவது ஒரு மரக்கால் அளவு) நெல் தருகிறேன் என்று கூறினார். பிள்ளையார் குளம் வெட்டும் வேலையை செய்ய தொடங்கினார். பொழுது மறைய தொடங்கியது. நந்தனாரும் அவருடன் வந்த பதினோரு பேரும் ஆதனுர் திரும்ப முற்பட்டனர். விநாயகர், நீங்கள் ஊரை விட்டு சென்றுவிட்டாள் நான் எவ்விதம் என் கூலியை வாங்கிக்கொள்வது என்றார். நந்தனார் நான் என் ஊர் சென்று, உங்கள் கூலியான பதக்கு நெல்லை, நாளை இந்த குளம் வெட்டும் இடத்துக்கே வந்து தருகிறோம் என்று கூறி புறப்பட்டார். நந்தனார் மறுநாள், பதக்கு நெல்லை எடுத்து தலையில் வைத்து கொண்டு திருப்புங்கூரில், குளம் வெட்டும் இடத்திற்கு சென்றார். அங்கு ஒரு அழகிய திருக்குளம் ஒன்றை விநாயகர் அமைத்திருந்தார். நந்தனார் தான் கொண்டுவந்த பதக்கு நெல் மூட்டையை விநாயகரிடம் ஒப்படைத்தார். இதனால் திருப்புன்கூரில் சிவலோகநாதன் கோயிலில் இருக்கும் பிள்ளையாருக்கு, "குளம் வெட்டிய பிள்ளையார்" என்ற பேர் வந்தது.
இவ்வாறே, திருப்புன்கூரில் இருந்து புறப்படுகையில், சிதம்பர நடராசர் பற்றிய சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. நந்தனார் ஓரமாக நின்று கொண்டு சிதம்பர நடராசர் பற்றிய கதையை உற்று கவனித்து கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவருக்கு சிதம்பர நடராசரை காணும் ஆவல் மேலோங்கியது. ஒவ்வொரு நாளும், நாளை சிதம்பரம் சென்று நடராசரை தரிசித்து விடலாம் என்று எண்ணி கொள்வார். அதனாலேயே அவருக்கு "திருநாளைப்போவார்" என்ற பெயர் வந்தது.



