ஓரை என்பது நாட்காட்டியில் 24 மணிநேரமும் செயல்படும் முட்களை போன்றது. வேத ஜோதிடத்தில் ஏழு கிரஹத்திற்கும் தனி தனியே ஒவ்வொரு நாட்களுக்கும் பகல் இரவு உட்பட ஓரைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு கிழமையன்று சூரியனின் ஹோரையால் அந்த நாள் துவங்கி சூரியனின் ஆதிக்க நாளாக வேத கால ரிஷிகளால் அருளப்பட்டது. அது அனுபவத்திலும் சரியானதாக இன்றளவும் செயல்பட்டுவருகிறது.
மேற்குறிப்பிட்டது போல திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் முறையே சந்திரன், செவ்வாய், புதன் போன்ற கிரஹங்களின் ஆதிக்க நாட்களாக அந்தந்த கிழமைகளில் அந்த நாளின் ஆதிக்கத்திற்குட்பட்ட கிரஹத்தின் ஓரைகள் அந்த நாளின் சூரிய உதயத்திற்கு பின்பு துவங்கும்..
மேற்படி ஓரைகள் சுப மற்றும் அசுப ஓரைகள் என்று இருவகையாக பிரிக்கப்பட்டு, சுப ஹோரைகளில் சுப காரியங்கள் செய்யவும் அசுப ஹோரைகளில் சுப காரியங்களை தவிர்க்கவும் வேத ஜோதிடத்தில் சொல்லப்பட்டது.
குரு, சுக்ரன் மற்றும் புதன் ஹோரைகளில் சுப காரியங்களை செய்தால் நல்ல விதமாக எந்தவித தடங்களுமின்றி காரியவிருத்தி ஏற்படும். உதாரணமாக தங்க நகைகள் வாங்க உகந்த ஹோரை குரு ஹோரை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் வாகனம் வாங்க உகந்த ஹோரை சுக்கிர ஹோரையாகும். புதன் ஹோரையில் வியாபாரம் துவங்க, அறிவியல் மற்றும் விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகளை துவங்க மற்றும் உயர் கல்விக்கு விண்ணப்பிக்க உகந்த ஹோரையாகும். இதுபோன்று அந்தஅந்த கிரஹத்தின் சுப தன்மைகளை அறிந்து ஒரு செயலை நீங்கள் செய்தால் மேற்படி சுப ஹோரையில் பயனை அடையலாம்.
அசுப ஹோரைகளை அசுப தன்மைகொண்டது என்று தவிர்க்க வேண்டாம். அதிலும் சில நன்மைகள் உள்ளது. சனீஸ்வரர், செவ்வாய் போன்ற கிரஹங்களின் ஆதிக்க நாள் மற்றும் ஹோரைகளில் அவர்களின் தன்மைக்கேற்ப வாழ்க்கையில் நமக்கு தேவைப்படும் சில செயல்களை மேற்படி ஹோரைகளில் செய்தால் பயன்பெறலாம். உதாரணமாக சனீஸ்வரர், செவ்வாய் ஹோரைகளில் கடனை திரும்ப செலுத்த ஆரம்பித்தால் மலை போல் உள்ள கடனும் பனி போல் விலகி விடும்.
வேத ஜோதிடத்தில் ராகு கேதுக்களை பற்றிய சூக்ஷும கணக்குகள் தெரிய வந்த பின்னர் அந்த ராகு கேதுக்களின் தன்மைகளை ஆராய்ந்து ஒவ்வொரு நாளிலும் ராகுவிற்குரிய நேரமாக ராகுகாலமென்றும் கேதுவுக்குரிய நேரமான எமகண்டம் என்றும் பிரித்து சொல்லப்பட்டுள்ளது. எனவே மேற்படி ஓரைகளில் ராகு கேதுவால் கிரஹணம் ஏற்படுவதால் ராகு கேதுவுக்குரிய பலன்களே அந்த நேரத்தில் செயல்படும். எனவே ஹோரை அறிந்து செயல்படும் போது ராகு கேதுக்களின் கால நேரத்தை தவிர்ப்பது நல்லது.
சூரியன் அசுப ஹோரை என்றாலும் அரசாங்க சம்பந்த காரியங்களை சூரியன் ஹோரையில் செய்யலாம். சந்திர ஹோரையில் வளர்பிறை சந்திர நாட்களில் சுப காரியங்களை செய்யலாம். மேற்படி ஹோரைகளை தவிர ராகுவிற்குரிய ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபடுவதின் மூலம் எதிரிகள் மற்றும் துன்பத்தில் இருந்து விடுபடலாம். கேதுவிற்குரிய எமகண்டத்தில் விநாயகரை வழிபடுவதின் மூலம் வறுமை நீங்கும்.
எனவே மேற்படி ஹோரைகளின் தன்மைக்கேற்ப செய்ய வேண்டிய செயல்களை செய்து, செய்ய வேண்டாத செயல்களை தவிர்த்து வாழ்வில் வரும் சவால்களை எளிதாக சந்தித்து வெற்றி பெறலாம்.
மேற்படி ஹோரைகளில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Very Good Information
பதிலளிநீக்கு